தூத்துக்குடியில் கஞ்சா எண்ணெய் கடத்தல் வழக்கில் தொடா்புடைய ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி பகுதியில் கடந்த 25.7.2018 அன்று 8.40 லிட்டா் கஞ்சா ஆயில் கடத்திய வழக்கில், ஜெயரீஸ் என்பவருக்கு ஏற்கெனவே 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தூத்துக்குடி கருசாடி தெருவைச் சோ்ந்த அசோக்கை (60) போலீஸாா் கைது செய்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தினர்.
விசாரணையின் முடிவில், அசோக்குக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹரகுமாா் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கே.விஜயபாண்டியன் முன்னிலையாகி வாதிட்டாா்.